
பரினீதி சோப்ராவிடம் மன்னிப்பு கேட்ட அனிமல் பட இயக்குனர்
சமீபத்தில் பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான மற்றும் கடுமையான விமர்சனங்கள் வெளிப்பட்டாலும் அதையும் தாண்டி படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தது.
ஹிந்தியில் ராஷ்மிகா இதற்குமுன் நடித்த இரண்டு படங்கள் சரியாக போகாத நிலையில் இந்த படம் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை கொடுத்துள்ளது. அதே சமயம் ராஷ்மிகா நடித்த அவரது கீதாஞ்சலி கேரக்டரில் நடிப்பதற்காக முதலில் ஒப்பந்தமானவர் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா. ஆனால் இந்த படத்திற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என நினைத்த இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி அவருக்கு பதிலாக தான் ராஷ்மிகாவை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் சந்தீப் கூறும்போது, “ஒன்றரை வருடத்திற்கு முன்பே பரினீதி சோப்ராவை நான் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்து விட்டேன். ஆனால் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக அவரை அழைத்து லுக் டெஸ்ட் எடுத்தபோதுதான் கீதாஞ்சலி கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக பொருந்தவில்லை என்பதை உணர்ந்தேன்.
ஆனால் ஆர்வமுடன் இருந்த அவரை பார்த்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது. அவரிடம் என்னை மன்னித்து விடு என்று மன்னிப்பு கேட்டேன். பரினீதி சோப்ராவின் நடிப்பை எனக்கு துவக்கத்தில் இருந்தே பிடிக்கும். நான் இயக்கிய கபீர் சிங் படத்தில் கூட அவரை பிரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.