நாட்டில் நான்கு வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை அதனால் முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி குறித்து புதிய கல்வி சீர்திருத்தத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (29) தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், முன் பிள்ளைப் பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது, உலகில் இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் சுமார் 6000 முன்பள்ளி டிப்ளோமாதாரிகள் காணப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு முதல் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால், முதலாம் தரத்திற்குச் சேர்க்கப்படும் குழந்தைகளின் முன் பிள்ளைப் பருவ வளர்ச்சியையும் அதற்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பயிற்சியற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.