மதுரை கலைஞர் நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம் – இனி வீட்டிற்கு புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம்!

மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.215 கோடியில் மிக பிரம்மாண்டமாக இந்த நூலகம் 6 தளங்களுடன் நான்கரை லட்சம் புத்தங்கங்களுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடி செலவிடப்பட்டுள்ளது. நவீன கட்டுமான தொழில்நுட்பத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் தானியங்கி டிஜிட்டல் நூலகமாக இந்த நூலகம் செயல்பட தொடங்கி இருக்கிறது.

அரிய நூல்கள் முதல் அண்மைக் கால எழுத்தாளர்கள் வரை எழுதிய நூல்கள் இங்கு உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆர்வமாக நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உள்ளன. ஆனால் போதுமான நூலகர்கள் இல்லாததால் தற்போதுவரை கலைஞர் நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை.

அதனால், வாசகர்கள், நூலகத்தில் இருந்த புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. நூலகத்திலேயே பல மணி நேரம் அமர்ந்து படிக்க முடியாத சூழல் இருந்ததால், வாசகர்கள் விரும்பிய புத்தகங்களை நுனிப்புல் மேயும் நிலையே ஏற்பட்டது. விரைவில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க நூலக நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கலைஞர் நூலகத்தில் இருந்து புத்தகங்களை வீட்டுக்கு கொண்டு சென்று படிப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை தற்போது தொடங்கி உள்ளது. தனி நபருக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.250 மற்றும் ஆண்டு சந்தா ரூ.100 சேர்த்து ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் உறுப்பினராக சேர்வோர் வீட்டுக்கு ஒரே நேரத்தில் 4 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம். குடும்ப உறுப்பினர்களாக நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு பெற்றோர், குழந்தைகள் 2 பேருக்கு உறுப்பினர் கட்டணமாக ரூ.500 மற்றும் ஆண்டு சந்தாவாக ரூ.200 சேர்த்து மொத்தம் ரூ.700 செலுத்த வேண்டும். இவர்கள் ஒரே நேரத்தில் 5 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம்.

மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேல்) உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் கட்டணம் ரூ.100 மற்றும் ஆண்டு சந்தா ரூ.50 சேர்த்து ரூ.150 கட்டினால் போதும். இவர்கள் ஒரே நேரத்தில் 4 புத்தங்களை எடுத்து சென்று படிக்கலாம். மாணவர்களுக்கு உறுப்பினர் கட்டணம் ரூ.150 மற்றும் ஆண்டு சந்தா ரூ.75 சேர்த்து ரூ.225 செலுத்தினால் ஒரே நேரத்தில் 5 புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.

உறுப்பினராக சேர விரும்புவோர் கலைஞர் நினைவு நூலக இணையதளத்தில் (https://www.kalaignarcentenarylibrary.org) விண்ணப்பங்களை நிரம்பி, 2 புகைப்படம், அரசு அங்கீகாரம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் முகவரி சான்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கலைஞர் நூலக நிர்வாகம், விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியுள்ளவர்களை கலைஞர் நூலக உறுப்பினராக சேர்க்க அங்கீகாரம் வழங்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.