
ரவிதேஜாவின் 'ஈகிள்' சோலோ ரிலீஸ் : வார்த்தையை காப்பாற்றிய தயாரிப்பாளர் சங்கம்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ரவிதேஜா நடிப்பில் ஈகிள் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. கார்த்திக் கட்டமனேனி என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி-9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த சங்கராந்தி பண்டிகையின்போது இந்த படம் ரிலீஸ் செய்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதேசமயம் மகேஷ்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்டோரின் படங்கள் வெளியானதால் தியேட்டர்கள் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும் என கூறி, ஈகிள் படத்தை வேறொரு நாளுக்கு மாற்றி வெளியிடுங்கள் என்றும், அந்த நாளில் ஈகிள் படம் மட்டுமே சோலோவாக ரிலீஸ் ஆகும்படி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தெலுங்கு பிலிம் சேம்பர் உறுதி அளித்திருந்தது,
இதற்கிடையே ஊரு பேரு பைரவகோனா மற்றும் தில்லு ஸ்கொயர் ஆகிய படங்கள் இதே தேதியில் ரிலீஸாவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தங்களின் ரிலீஸ் தேதியை வெவ்வேறு நாட்களுக்கு மாற்றி வைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஈகிள் படம் தெலுங்கில் சோலோவாக வெளியாகிறது. அதேசமயம் அதற்கு முதல்நாளான பிப்-8ஆம் தேதி மம்முட்டி-ஜீவா நடித்துள்ள யாத்ரா-2 படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.