இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்

சென்னை: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது மற்றும் 4-வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை 3.75 கி.மீ. தொலைவுக்கு இணைக்கும் இரட்டை அடுக்கு மேம்பாலம் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்பகுதியில் மொத்தம் 265 தூண்களில் இதுவரை 106 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப் படுகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மாதவரம் – சோழிங்கநல்லூர் ( 5-வது வழித் தடம் ), கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி ( 4-வது வழித் தடம் ) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமையவுள்ளன. மொத்தம் 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம் பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையைச் சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப் படுகின்றன.

மொத்தம் 265 தூண்கள்: இந்த பாதையில் சி-4, சி-5 என்று பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 265 தூண்களில் இதுவரை 106 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாலத்தை தாங்கும் தூண்கள் அதாவது தூண்களில் தொப்பி வடிவிலான கட்டுமானம் ( பியர் கேப்கள் ) அமைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, சில இடங்களில் தூண்கள் மீது இரும்பு பாலத்தை எடுத்து வைக்கும் பணியும் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2 அடுக்குகளிலும் வெவ்வேறு வழித் தடங்களுக்கு செல்லும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதற்காக, பிரம்மாண்டமான தூண்கள் அமைக்கப் படுகின்றன. இதற்கு பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையைச் சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

4-வது வழித்தடத்தில் நடைமேடை பூமியில் இருந்து 13.9 மீட்டர் உயரத்திலும், 5-வது வழித் தடத்தில் நடைமேடை பூமியில் இருந்து 21.5 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படும். இந்த பாதையில் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 106 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.

சுமார் 2 ஆண்டுகளில் இரட்டை அடுக்கு மேம்பால பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலி கிராமம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகள் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.