பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கவேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி கடந்த 13-ம் தேதி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் அவர்கள் டெல்லிக்குள் வரவிடாமல் பஞ்சாப், ஹரியானா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். எல்லைக்கு சீல் வைக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. அவர்கள் 13-ம் தேதி எல்லையை தாண்ட முயன்ற போது அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. இதில் பஞ்சாப், ஹரியானா எல்லையில் மட்டும் 400 விவசாயிகள் காயம் அடைந்தனர். பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு நேற்று முன்தினம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான குழு ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி மட்டும் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்திட்டம் குறித்து விவசாய அமைப்புகள் நேற்று ஆலோசனை நடத்தின. இந்த நிலையில் தான் மத்திய அரசின் திட்டத்தை விவசாயிகள் அமைப்பு நிராகரித்து இருக்கிறது. இது குறித்து பஞ்சாப், ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் சங்க தலைவர் சர்வான் சிங் கூறுகையில்,” மத்திய அரசின் திட்டம் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே புதன் கிழமை அமைதியான முறையில் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்படுவோம்” என்றார்.
மற்றொரு விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் கூறுகையில், ”அரசின் திட்டத்தை ஆய்வு செய்தோம். அதில் ஒரு தெளிவு இல்லை. ஒரு சில விலைபொருள்களை மட்டும் அரசு வாங்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளது. பருப்பு வகைகள் மற்றும் பருத்தியை சுழற்சி முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு மட்டுமே அது பயனளிக்கும். மற்ற விவசாயிகளுக்கு பயனளிக்காது. 23 வகையான விவசாய விலைபொருட்களை குறைந்த பட்ச ஆதரவு விலையில் அரசு வாங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாகும். அதுவும் அரசு குறைந்த விலை மட்டுமே கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறது. இவ்விவகாரத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்காவிட்டால் மீண்டும் விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவேதான் அரசின் திட்டத்தை நிராகரிக்கிறோம்.
பருப்பு வகைகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கொடுத்தாலே அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி செலவாகும் என்று மத்திய அமைச்சர் சொன்னார். ஆனால் முன்னாள் வேளாண்துறை கமிஷனர் பிரகாஷ் நடத்திய ஆய்வில் அனைத்து விவசாய விளைபொருட்களையும் குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்தாலே ரூ.1.75 லட்சம்தான் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய ஆண்டுக்கு ரூ.1.75 கோடி செலவு செய்கிறது. அந்த பணத்தை எண்ணெய் வித்துக்கள் விளைவிக்க செலவிடலாம். நாங்கள் புதன் கிழமை திட்டமிட்டபடி டெல்லி நோக்கி அமைதியான முறையில் பேரணியாக செல்வோம். நாங்கள் அமைதியான முறையில் போராட எங்களை அரசு அனுமதிக்கவேண்டும். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தை தயாராகவே இருக்கிறோம். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசிய போலீஸார் மீது சுப்ரீம் கோர்ட் தானாக முன் வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்”என்று தெரிவித்தார்.
விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்தை நிராகரித்து இருப்பதால் மீண்டும் பஞ்சாப், ஹரியானா எல்லையில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. மீண்டும் கூடுதல் படைகள் எல்லைக்கு வரவைக்கப்படுகிறது. பஞ்சாப்பில் இன்று இரவு வரை இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY