
'ராயன்' படத்தில் நான் நடிகர் மட்டுமே – செல்வராகவன்
தனுஷின் 50வது படத்தின் தலைப்பு அறிவிப்பும், முதல் பார்வை போஸ்டரும் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. தனுஷே இயக்கியுள்ள இப்படத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
இப்படத்தின் கதை செல்வராகவனுடையது என சிலர் தவறான தகவலைப் பரப்பியுள்ளார்கள். அதற்கு பதிலளித்துள்ள செல்வராகவன், “நண்பர்களே, ராயன் படத்திற்கான கதையை நான் எழுதினேன் என்ற செய்திகளைப் பார்த்தேன். 'ராயன்' படத்தின் கதை, திரைக்கதைப் பணியில் எனது பங்கு எதுவுமே கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறேன். இது முற்றிலும் தனுஷின் கனவுக் கதை, இப்போது அதை அவரது சொந்தப்படமாகவே உருவாக்கியுள்ளார். இதில் நான் வெறும் நடிகன் மட்டுமே. உங்களைப் போலவே என்னாலும் 'ராயன்' படத்தைத் தியேட்டர்களில் பார்க்கக் காத்திருக்க முடியவில்லை. எனது சகோதரரின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை குறித்து பெருமைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவன் தற்போது நடிகராக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கடைசியாக தனுஷ் நடித்து 2022ம் ஆண்டில் வெளிவந்த 'நானே வருவேன்' படத்தை இயக்கினார். தற்போது '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை மும்முரமாக இயக்கி வருகிறார்.