
25 படங்களில் நடித்து விட்டேனா : வைபவ் ஆச்சர்யம்
அறிமுக இயக்குநர் ஷெரீப் இயக்கத்தில் வைபவ், தன்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்னகிறார். இது வைபவ் நடிக்கும் 25வது படம்.
படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வைபவ் பேசியதாவது: இது நான் நடிக்கும் 25வது படம். அதற்குள் இத்தனை படங்களில் நடித்துவிட்டேனா என்று ஆச்சரியமாக இருக்கிறது. படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா? என்று அனைவரும் வியந்து போய் பார்ப்பார்கள். குற்றச் சம்பவங்களில் துப்புதுலக்கும் புலனாய்வு காவல் துறையினருக்கு உதவும் முக புனரமைப்பு ஓவியக் கலைஞன் வேடத்தில் நான் நடித்துள்ளேன்.
அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் 'தி கோட்' படத்தில் நடிக்கிறேன். 69வது படத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று விஜய் சொல்லிவிட்டார். அதற்கு முன்பு அவரது 68வது படத்தில் நடித்து முடித்துவிட்டேன். படத்தின் கதை எனக்கு என்னவென்று தெரியாது. ஏனென்றால் வெங்கட்பிரபு, சரோஜா காலத்தில் இருந்தே எனக்கு கதை சொல்லியது கிடையாது. ரஜினி சாருடனும் நடிக்க வாய்ப்பு அமைந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்'' என்றார்.