இந்திய அணியின் ஒப்பந்தம்… 'இந்த இருவரும்' நீக்கம்? – புதிய பட்டியல் தயார்!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இதற்கு பின், வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல நகரங்களின் நடைபெற உள்ளது. இந்த சீசனின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை ஐபிஎல் நிர்வாகத்தால் நேற்று வெளியிடப்பட்ட பின் அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. 

இப்படி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து காத்திருக்கும் நிலையில், இந்திய தேசிய கிரிக்கெட் அணியிலும் சில மாற்றங்கள் நடைபெற உள்ளதாக சூழல்கள் தெரிவிக்கின்றன. ஜீன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடரில் யார் யாருக்கு வாய்ப்பு என்பதை ஐபிஎல் உறுதி செய்யும், இந்தாண்டு ஓடிஐ போட்டிகளுக்கு பெரியளவில் முக்கியத்துவம் இருக்காது தொடர்ந்து டெஸ்ட் போட்டிதான் டி20க்கு பின் அதிக முக்கியத்துவத்தை பெறுகிறது. 

முதல் தர போட்டிக்கு முக்கியத்துவம்

அந்த வகையில், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரேல், ஆகாஷ் தீப் போன்ற ரஞ்சி டிராபி உள்ளிட்ட முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடிவர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து, காயம் உள்ளிட்ட வேறு காரணங்கள் இல்லாமல் ஓய்வில் இருக்கும் வீரர்கள் நிச்சயம் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட வேண்டும் என பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன் மூலம், ரஞ்சி டிராபி உள்ளிட்ட முதல் தர போட்டிக்கு இனி தொடர்ந்து பிசிசிஐ பெரிதும் முக்கியத்துவம் அளிக்கும் என தெரிகிறது.

குறிப்பாக, நீண்ட நாள்களாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த இஷான் கிஷன், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2ஆவது போட்டிக்கு பின் கழட்டிவிடப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்களின் மாநில அணிகளுக்கான ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை. 

வெளியான புதிய தகவல்

வரும் ஐபிஎல் தொடருக்காக தனது ஆட்டத்தை மேம்படுத்த இஷான் கிஷனும் (Ishan Kishan), சிறிய முதுகு பிடிப்பு காரணமாக ஷ்ரேயாஸ் ஐயரும் (Shreyas Iyer) ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என கூறப்பட்டது. இருப்பினும், இவர்களின் விளக்கம் பிசிசிஐயால் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாததால் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதுகுறித்து ஊடகம் ஒன்றில் வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இருவரும் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, வாரியம் அறிவுறுத்திய பின்னரும் கூட முதல் தர போட்டிகளை புறக்கணித்தது இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர்…?

பிசிசிஐ தரப்பிலான ஒருவர் அந்த ஊடகத்திடம் அளித்த பேட்டியில், “அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு, 2023-24 சீசனுக்கான மத்திய ஒப்பந்த வீரர்களின் பட்டியலை ஏறத்தாழ இறுதி செய்துள்ளது. இதனை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும். பிசிசிஐயின் உத்தரவை மீறி இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாததால், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது” என கூறப்பட்டது. 

இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயருக்கு நெருக்கமான ஒருவர் அதே ஊடகத்திடம் கூறுகையில், “சிறிய முதுகு பிடிப்பு காரணமாகவே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருந்துள்ளார். அந்த வகையில், ரஞ்சி டிராபியில் விளையாடவில்லை என்பதற்காக அவரை ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்க வாய்ப்பே இல்லை” என்றார். 

2022-23 ஒப்பந்த பட்டியலின் படி, இஷான் கிஷன் C பிரிவிலும், ஷ்ரேயாஸ் ஐயர் B பிரிவிலும் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, இஷான் கிஷன் 1 கோடி ரூபாயையும், ஷ்ரேயாஸ் ஐயர் 3 கோடி ரூபாயையும் வருமானமாக பெறுவது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.