வாரணாசி: வாரணாசி சாலைகளில் மது அருந்திய மக்கள் வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தேன் என்று ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “மதி இழந்தவர் என் காசியின் (வாரணாசி) குழந்தைகளை குடிகாரர்கள் என்று அழைக்கிறார்” என்று சாடியுள்ளார்.
வாரணாசியில் வெள்ளிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்தி மோடி, வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரைக் கூறிப்பிடாமல், “காங்கிரஸின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர், வாரணாசி மக்களை அதன் சொந்த மண்ணில் வைத்து அவமானப்படுத்தியுள்ளார். என்ன வகையான மொழி அது? இரண்டு தசாப்தங்களாக மோடியை துஷ்பிரயோகம் செய்தவர்கள், இப்போது உத்தரப் பிரதேச இளைஞர்கள் மீது அவர்களின் விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். உத்தரப் பிரதேச இளைஞர்களுக்கு இண்டியா கூட்டணித் தலைவர்கள் ஏற்படுத்திய அவமானத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது.
இப்போது நடந்திருப்பதுதான் யதார்த்தம். குடும்பத்தைச் சார்ந்திருக்கும் அவர்கள் இளைஞர்களின் திறமையைக் கண்டு பயப்படுகிறார்கள். மேலும், அவர்களின் அசவுகரியத்துக்கு மற்றொரு காரணம், காசி மற்றும் அயோத்தியின் புதிய மாற்றத்தை அவர்கள் விரும்பவில்லை. வாரிசு அரசியல், ஊழல் போன்ற காரணங்களால் உத்தரப் பிரதேசம் பல தசாப்தங்களாக வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக கூடுவது வழக்கம். இறுதியில் முடிவு பூஜ்ஜியமாக வந்ததும், அவர்கள் பிரிந்து ஒருவர் மற்றவரை துஷ்பிரயோகம் செய்யவார்கள். இந்த முறையும் ஒட்டுமொத்த இந்தியாவின் எண்ணமும் மோடி உத்தரவாதத்துக்கு ஆதரவாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் அனைத்து இடங்களிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும். எனது மூன்றாவது பதவிக் காலம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமான ஒன்றாக இருக்கும்” என்று பிரதமர் மோடி பேசினார்.
‘சாதி அரசியல்’ என்ற போர்வையில்… – வாரணாசியில் இன்று நடைபெற்ற துறவி குரு ரவிதாசின் 647-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அருகே சீர் கோவர்தன்புரில் உள்ள துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில், ரவிதாஸ் பூங்காவுக்கு அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துறவி ரவிதாஸ் சிலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.
சுமார் ரூ.32 கோடி மதிப்புள்ள துறவி ரவிதாஸ் கோயிலைச் சுற்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த அவர், துறவி ரவிதாஸ் அருங்காட்சியகத்திற்கும் மற்றும் சுமார் ரூ.62 கோடி மதிப்பிலான பூங்காவை அழகுபடுத்தும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசும்போது, “பெரும்பாலான மக்கள் சாதி மற்றும் இன வேறுபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். சாதியம் என்ற நோய் மனிதகுலத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. சாதியின் பெயரால் யாரையாவது தூண்டினால், அதுவும் மனிதகுலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
பட்டியலின மக்களின் நலனுக்கு எதிரானவர்கள் ‘சாதி அரசியல்’ என்ற போர்வையில் குடும்பம் மற்றும் குடும்ப அரசியல் செய்கிறார்கள். பட்டியலின மக்களின் எழுச்சியையும், சோதனைகளையும் இத்தகைய சக்திகள் பாராட்டுவதை வாரிசு அரசியல் தடுக்கிறது. நாம் சாதி வெறியின் எதிர்மறை மனப்பான்மையைத் தவிர்த்து, ரவிதாசின் நேர்மறையான போதனைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று பேசினார்.
காசியும் காஞ்சியும்: வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுதந்திர சபாகரில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சமஸ்கிருத போட்டியில் வென்றவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “நமது அறிவு, அறிவியல் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய மொழிகளில் சமஸ்கிருதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியா என்பது ஒரு கருத்து, சமஸ்கிருதம் அதன் தலையாய வெளிப்பாடு. இந்தியா ஒரு பயணம், சமஸ்கிருதம் அதன் வரலாற்றின் முக்கிய அத்தியாயம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, சமஸ்கிருதம் அதன் பிறப்பிடம்.
வானியல், கணிதம், மருத்துவம், இலக்கியம், இசை மற்றும் கலைகள் குறித்த ஆராய்ச்சியில் சமஸ்கிருதம் முக்கிய மொழியாக இருந்த காலம் உண்டு. இந்த ஒழுக்கங்கள் மூலம் இந்தியா தனது அடையாளத்தைப் பெற்றது. காசி மற்றும் காஞ்சியில் வேதங்களை ஓதுவது ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதற்கான குறிப்புகள்” என்று அவர் கூறினார்.