நடிகர் தர்ஷன் மீது மகளிர் ஆணையத்தில் புகார்

கன்னட திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தர்ஷன். தொடர்ந்து ஏதாவது சர்ச்சையான விஷயங்களில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு படத்தின் தயாரிப்பாளரிடம் அந்த படத்தின் டைட்டில் உரிமை குறித்து ஒரு பட நிகழ்வில் அவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அவர் மீது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது.

சமீபத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் பகுதியில் தனது ரசிகர்கள் கூடிய ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார் தர்ஷன். அதில் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் அவருடைய காதலி என்று கிசுகிசுக்கப்படுகின்ற பவித்ரா கவுடாவுக்கும் இடையேயான வார்த்தை போர் குறித்து தர்ஷன் பேசும்போது, “இன்று இவளுக்கு என்றால் நாளை அவளுக்கு” என்று பெண்களை அவமரியாதை செய்யும் விதமான மரியாதை குறைவான வார்த்தைகளை பேசினார். இதனைத் தொடர்ந்து கவுடத்தியரா சேனா என்கிற பெண்கள் அமைப்பு தர்ஷன் மீது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

“தர்ஷன் இன்றைய பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர். பொதுவெளியில் இப்படி ரசிகர்கள் மத்தியில் பெண்களைப் பற்றி அவர் அநாகரிகமான வார்த்தைகளை பேசியது கண்டிக்கத்தக்கது. இரண்டு மூன்று நாட்களில் இது குறித்து அவர் தானாகவே முன்வந்து வருத்தம் தெரிவிப்பார் என எதிர்பார்த்தோம். அப்படி நடக்காத நிலையில் தான் அவர் மீது மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம். விரைவில் அவர் இதுகுறித்து பகிரங்கமாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் வீட்டு முன்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என்று அந்த மகளிர் அமைப்பினர் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.