புதுடில்லி ராணுவத்தில், கர்னல் பதவிக்கு தேர்ந்தெடுப்பதில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், தேர்வு நடைமுறையை தெளிவுபடுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ராணுவத்தில், எஸ்.எஸ்.சி., எனப்படும் குறுகிய கால சேவையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி வழங்க 2020, பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேபோல, கடற்படையிலும் பெண்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்க 2020, மார்ச்சில் உத்தரவிட்டது.
இந்த இரு உத்தரவுகளையும் பிறப்பிக்கும்போது, முப்படைகளில் பணியாற்றும் ஆண் – பெண் அதிகாரிகள் இடையே பாலியல் ரீதியிலான பாகுபாடு பார்க்கப்படுவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்நிலையில், ராணுவத்தில் நிரந்தர பணியிடத்தில் சேர்க்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு கர்னல் பதவி வழங்கும் போது, நிறைய பாகுபாடுகள் பார்க்கப்படுவதாக பெண் அதிகாரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆண்களுக்கு கர்னல் பதவி உயர்வு வழங்குவதில் பின்பற்றப்படும் நடைமுறையை காட்டிலும், பெண்களுக்கு வழங்கும் நடைமுறையில் பல்வேறு பாகுபாடுகள் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக் கட்டியது.
எனவே, இது தொடர்பான தேர்வு நடைமுறையை தெளிவுபடுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement