சென்னை: மகாவீர் ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் நிலையில், சமண சமயப் பெருமக்களுக்கு குடியரசுத்தலைவர் திரவுதி முர்மு, தமழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக சமண சமூகத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாவீர் ஜெயந்தி அகிம்சை மற்றும் இரக்கத்தின் வடிவமான பகவான் மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இந்த பண்டிகை நமக்கு அன்பு மற்றும் அமைதியின் செய்தியை வழங்குகிறது. இலட்சிய மற்றும் நாகரிக சமுதாயத்தை உருவாக்க அகிம்சை, பிரம்மச்சரியம், உண்மை மற்றும் துறவு ஆகியவற்றின் பாதையை மகாவீரர் காட்டினார்.
அவரது போதனைகள் எப்போதும் மனித குலத்தின் நலனுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த நன்னாளில், சமூகத்தில் அன்பையும் நல்லிணக்கத்தையும் பரப்பவும், நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் உறுதியேற்போம்.
செல்வப்பெருந்தகை: பிஹார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர். அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு நீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர்.
அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளில், தமிழகத்தில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழும் சமண சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ. பன்னீர் செல்வம்: அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டி வாழ வேண்டும் என்கிற அற நெறியைப் பரப்பிய பகவான் மகாவீரர் பிறந்த நாளைக் கொண்டாடும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இனிய நாளில், அமைதிக்கு வழி வகுக்கும் பகவான் மகாவீரர் அவர்களின் போதனைகளை மனதில் நிலைநிறுத்தி, அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கையை நாம் அனைவரும் மேற்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.