கோயில் திருவிழாவிற்காக பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வணிக வைசியர் தெருவைச் சேர்ந்தவர் கலியனாண்டி. இவரின் மகன் கல்யாணகுமார் (வயது 19). இவர், கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் பூக்குழி திருவிழாவுக்கு பேனர் வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை கல்யாணகுமார் செய்துள்ளார்.
தொடர்ந்து, பேனர் வைப்பதற்கான கம்பியை எடுத்துச் செல்கையில் வத்திராயிருப்பு பஜார் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரில் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து கல்யாணகுமார் தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்த நண்பர்கள், உடனே அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில், கல்யாணகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரின் உடல் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்றனர்.