வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைன் டி20 உலக்கோப்பையில் பங்கேற்பது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
ஐபிஎல்-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதனிடையே உலகக் கோப்பை தொடரில் விளையாடக் கோரி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல், நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரைனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சுனில் நரைன் ஓய்விலிருந்து வந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து சுனில் நரைன் விளக்கமளித்திருக்கிறார். “எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட வேண்டும் என அழைப்புகள் வந்தன.
நான் ஓய்விலிருந்து திரும்ப வந்து டி20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்தக் கதவை நான் ஏற்கனவே மூடிவிட்டேன். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் தொடர்ந்து ஆதரிப்பேன். அவர்கள் கோப்பையை வெல்ல வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.