முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரயில்நிலையங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். அங்கு இருக்கும் கூட்டத்துக்கு இடையே சில மணி நேரங்கள் காத்திருந்து ரயில் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். இது ரயில் பயணம் செய்பவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகள் வரிசையில் நிற்பதில் இருந்து நிவாரணம் வழங்கவும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் டிக்கெட்டுகளை எளிதாக உருவாக்கும் வசதியை விரிவுபடுத்தவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தது.
ரயில்வே துறையின் மொபைல் செயலியான யுடிஎஸ் மூலம் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்யும் பயணிகள் UTS On Mobile App டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலி மூலம் நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகளை வாங்கலாம், மற்றும் புதுப்பிக்கலாம். ஒவ்வொரு ரீசார்ஜிலும் 3 சதவீதம் போனஸ் கிடைக்கும். ஆர்-வாலட்டை ஆன்லைனிலும் UTS மூலமாகவும் பயன்படுத்தலாம். கவுண்டரில் ரீசார்ஜ் செய்யலாம். R Wallet ஐ குறைந்தபட்சமாக 50 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 9,600 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
யுடிஎஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?
இந்த மொபைல் செயலியை பிளே ஆப் ஸ்டோரிலிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலில் பயணி தனது மொபைல் எண், பெயர், பிறந்த தேதி, கடவுச் சொல், பாலினம் ஆகியவற்றை கொடுத்து யூடிஎஸ் செயலியில் பதிவு செய்ய வேண்டும். வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன், பயணிகளுக்கு பூஜ்ஜிய இருப்புடன் ரயில்வே வாலட் தானாகவே உருவாக்கப்படும்.
பயணம் தொடங்கும் ரயில் நிலையம், செல்ல வேண்டிய ரயில் நிலையம் போன்றவற்றை நாமே உள்ளீடு செய்து எளிதாக பயணச் சீட்டு பெறலாம். பயணிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர்-வாலட், நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம். இச்செயலி மூலம், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ரயில் நிலையத்துக்கு 15 மீட்டருக்கு அப்பால் இருந்தும் பெற முடியும். ஆனால் ரயில் நிலைய எல்கைக்குள் வந்த பிறகும் யுடிஎஸ் மொபைல் செயலியை பயன்படுத்தி ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்ட க்யூ ஆர் குறியீடு ஸ்கேன் செய்து, தேவையான தகவல்களை உள்ளீடு செய்து பயணசீட்டு பெறலாம்.