மதுரை: எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நினைக்கிறார் நடிகர் விஜய், என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 70-வது பிறந்தநாளையொட்டி மதுரை மாநகர அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கட்சியினர் 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவின் 3 ஆண்டு சாதனையை அக்கட்சியின் தலைவர்கள்தான் கொண்டாடுகின்றனர். மக்கள் கொண்டாடவில்லை. திமுக ஆட்சி கூமுட்டையாய் போய்விட்டது. தமிழகத்தில் பஞ்சுமிட்டாய், சவ்வு மிட்டாய் போல போதை மிட்டாய்கள் வந்துவிட்டன. சர்பத்திலும் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்படுகிறது.
பெண் காவல் ஆய்வாளர் வீட்டிலே கொள்ளை போகிறது என்றால் அந்தளவுக்குச் சட்டம்- ஒழுங்கு, பாதுகாப்பு கெட்டுப்போய் உள்ளது. அண்ணாமலை, பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது எங்களுக்கு மகிழ்ச்சி. எல்லோரும் வாழ்த்துச் சொல்லும் அளவுக்குத் தகுதி படைத்தவர் பழனிசாமி.
திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா துறைகளிலும் அவர்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவார்கள். திரைப்படத் துறையையும் கைப்பற்றி உள்ளனர். இதனால், ரஜினியே பாதிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியை எதிர்த்துப் பேசினால் அடக்குமுறைகளால் அடக்கப் பார்க்கின்றனர்.
நடிகர் விஜய் நன்றாகச் செயல்படக் கூடியவர். அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி. எம்ஜிஆரைப் போல அவர் சம்பாதித்த பணத்தை பொதுமக்கள், மாணவர்களுக்குச் செலவு செய்ய நினைக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.