கொலைசெய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ-வின் உறவினர்; ஸ்பாட்டுக்கு சென்ற அமைச்சர் – கும்பகோணத்தில் பரபரப்பு!

கும்பகோணம், பந்தநல்லுார் அருகே உள்ள நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் கலைவாணன் வயது 30. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தி.மு.கவில் திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்தார். இவர் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., கண்ணனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக நிர்வாகி கலைவாணன்

இந்நிலையில் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற கலைவாணன் இரவு 12 மணி வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். வயலில் தலை, கழுத்து, கை, முகம் உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் வெட்டப்பட்டு இறந்து கிடந்துள்ளார் கலைவாணன். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக பந்தநல்லுார் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷண்ன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைவாணன் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்தக் கொலை சம்பவம் பந்தநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் எஸ்.பி., ஆஷிஷ்ராவத், அதிகாலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், ஜெயங்கொண்டம் தி.மு.க., எம்.எல்.ஏ. கண்ணன் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனர். பாதுகாப்பு பணிக்காக ஏராளாமான போலீசார் குவிக்கப்பட்டனர். தி.மு.க நிர்வாகியும், திமுக எம்.எல்.ஏ-வின் நெருங்கிய உறவினருமானவர் கொலை செய்யப்பட்டது அரசியல் வட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்டு கிடந்த வயல்

இது குறித்து சிலரிடம் பேசினோம், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய்குன்னம் பகுதியில் உள்ள கோயிலில் திரைசீலைக்கு சிலர் தீ வைத்து எரித்தனர். இதனை கலைவாணன் மற்றும் அவருடைய உறவினர் ஒருவரும் தட்டிகேட்டனர். கலைவாணனுக்கு ஊர் மக்கள் சப்போர்ட்டும் இருந்தது. இதனால் தீ வைத்த நபர்களுக்கும் கலைவாணனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த நபர்கள் கலைவாணன் மற்றும் அவருடைய உறவினர் வீட்டில் வைத்திருந்த வைக்கோல் போரை தீ வைத்து எரித்தனர்.

இது போன்ற சம்பவம் கடந்த 6 மாதமாக நடந்தது. இது குறித்து கலைவாணன் நான்கு முறை புகார் அளித்தும் போலீஸார் முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. வைக்கோலுக்கு தீ வைத்த நபர்கள் `தொடரும்’ என்பதற்கு பதிலாக `தெடரும்’ என அப்போது சுவர்களில் எழுதி வைத்து விட்டு சென்றிருந்தனர். அந்த கையெழுத்தை அடையாளமாக வைத்து ஜெயபிரகாஷ், பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

கலைவாணன் வீடு

சில தினங்களுக்கு முன்பு கலைவாணன் வீட்டுக்குள் ஒரு துண்டு சீட்டு கிடந்துள்ளது. அதில் தொடரும் என்றும் மகேஷ், கலைவாணன் உயிரா, பொருளா அடுத்தது? என்றும் எழுதப்பட்டிருந்தது. வைக்கோலை தீ வைத்த போது எழுதிய அதே பாணியில் எழுதப்பட்டிருந்தது. மேலும் கலைவாணன் குடும்பத்தில் சொத்து தொடர்பான பிரச்னையும் இருந்து வந்தது. இந்நிலையில் கலைவாணன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே வைக்கோல் போருக்கு தீ வைத்தவர்கள் இதை செய்துள்ளார்களா அல்லது திசை திருப்புவதற்காக முன்பு போல் எழுதி போட்டுவிட்டு வேறு யாரும் இதை செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.

கலைவாணன் கொலை செய்யப்பட்ட இடத்தில் மதுபாட்டில்கள் மற்றும் பல ஜோடி செருப்புகள் கிடந்துள்ளன. மேலும், கலைவாணன் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டுள்ளது. இவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பந்தநல்லூர் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.