டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?

2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும் பிசிசிஐ விரைவில் இந்த பதவிக்கு விண்ணப்பங்களை ஏற்க உள்ளது.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, டிராவிட் மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று உறுதிப்படுத்தினார். அவரை தவிர வேறு யாரு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நாங்கள் நீண்ட கால பயிற்சியாளரைத் தேடி வருகிறோம். குறைந்தது மூன்று ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்நிலையில் ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் அந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. 

டிராவிட்டின் இடத்தை நிரப்புவது சற்று கடினம் என்றாலும், அவருக்கு நிகரான ஒருவரை புதிய பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முயற்சி செய்கிறது.  தற்போது பெங்களூருவில் என்சிஏ தலைவராக இருக்கும் விவிஎஸ் லட்சுமணன் டிராவிட்டிற்குப் பதிலாக பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வீரேந்திர சேவாக், அனில் கும்ப்ளே போன்றவர்களும் இந்த பதவிக்கு ஆர்வம் காட்டலாம். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் விரும்பினால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முடியும்.

ஆனால் இந்திய அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரும், மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மாற முடியாது. ராகுல் ட்ராவிட்டின் இடத்தை நிரப்ப தோனி இன்னும் அதிகார்வப்பூர்வமாக தகுதி பெறவில்லை. ஏனெனில் தோனி இன்னும் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறார்.  ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு லீக் போட்டியில் விளையாடும் வீரர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மாற முடியாது. ஒருவேளை தோனி பயிற்சியாளராக மாற வேண்டும் என்றால் சிஎஸ்கே அணியில் இருந்து விலக வேண்டும். 

ஐபிஎல்லில் விளையாடி கொண்டு இருந்த போதிலும் தோனி 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார். அந்த ஒரு தொடருக்கு மட்டும் இந்திய அணியுடன் பங்கேற்ற தோனி அதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. தோனி இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்பினால் கிட்டத்தட்ட 10 மாதங்கள் இதற்காக ஒதுக்க வேண்டும். ஆனாலும் இந்த பதவிக்கு தோனி விண்ணப்பிக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தோனி ஐபிஎல்லை தவிர ராஞ்சியில் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சென்னை அணியின் வழிகாட்டியாக சேரலாம்.

தோனியின் ஓய்வு குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் ஐபிஎல் 2024க்கு பிறகு அவர் ஓய்வு பெறுவாரா என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஐபிஎல் 2025க்கு முன்னதாக ஒரு மெகா ஏலம் உள்ளது, மேலும் தோனி அடுத்த ஆண்டு விளையாட விரும்பினால் சிஎஸ்கே அவரை தக்க வைத்துக் கொள்ளும். இந்த ஆண்டு தனது கேப்டன்சி பதவியை தோனி ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார். இதன் மூலம் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி ஆண்டில் இருப்பது தெளிவாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.