சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு @ கோவை

கோவை: அவதூறு வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக, சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனல் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்த கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் கடந்த 4-ம் தேதி அவரை கைது செய்தனர். இச்சூழலில், சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதாவது, கோவை கோபாலபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நேற்று (மே 14) புகார் அளித்தார்.

அதில், ‘கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரெட் பிக்ஸ் என்ற யுடியூப் சேனலில் யுடியூபர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மறைந்த தியாகி முத்துராமலிங்கத் தேவர் குறித்து இழிவாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசியுள்ளனர். இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தப் புகாரின் அடிப்படையில், ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது அவதூறாக பேசுதல், இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இன்று அதிகாலை (மே 15) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, திருச்சி மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர், தங்களது வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக யூடியூபர் சவுக்கு சங்கரை வேன் மூலம் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து இன்று (மே 15) திருச்சிக்கு அழைத்துச் சென்றனர். அதன் விவரம் > ‘என்னை பெண் காவலர்கள் தாக்கினர்’ – திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.