Rohit Sharma : ’தனியுரிமையை பாதிக்கிறது’ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது ரோகித் சர்மா அதிருப்தி

ஐபிஎல் கிரிக்கெட்டின்போது அபிஷேக் நாயருடன் பேசிக் கொண்டிருந்ததை ஒளிபரப்பிய ஸ்டார் ஸ்போரட்ஸ் நிறுவனத்துக்கு ரோகித் சர்மா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனில் லீக் போட்டிகள் எல்லாம் நிறைவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு நகர்ந்துவிட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்  ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இம்முறை புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து முதல் அணியாக வெளியேறியது. 

அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டதால் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் அணி நிர்வாகம் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அதனால், பிளேயர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை. அணி நிர்வாகத்தின் இத்தகைய தன்னிச்சையான முடிவு மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்தாண்டு ஆட்டத்தில் எதிரொலித்தது. இருப்பினும் ஒரு பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா ஒன்றிரண்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். தன்னுடைய மோசமான பேட்டிங் குறித்தும் அவரே வெளிப்படையாக பேசினார்.

May 19, 2024

இது குறித்து ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய பிறகு பேசிய அவர், என்னுடைய ஆட்டத்திறனுக்கு ஏற்ப நான் இந்த ஐபிஎல் தொடரில் ஆடவில்லை என்பது எனக்கு தெரியும். இருப்பினும், நான் செய்து பார்த்த புதிய முயற்சிகள் எல்லாம் என்னுடைய அடுத்தக்கட்ட கிரிக்கெட்டுக்கு உதவும் என்ற நம்பிக்கை இந்த ஐபிஎல் கொடுத்திருக்கிறது என கூறினார். அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி மீதான அதிருப்தியையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது வெளிப்படையாக காண்பித்தார். அபிஷேக் நாயருடன் பேசும்போது, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து எடுத்த முடிவில் உடன்பாடில்லை எனவும், அணி இப்போது இருக்கும் நிலைக்கு அவர்களே காரணம் என்றும் தெரிவித்தார். இந்த உரையாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் எடிட் செய்யாமல் அப்படியே தொலைக்காட்சி மற்றும் சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்துவிட்டது.

கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டவுடன் உடனடியாக அதனை நீக்கியும் விட்டது. பின்னர் மற்றொரு போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மா, நண்பர்கள் தவல் குல்கர்னி உள்ளிட்டோருடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஆடியோவை மியூட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அந்த வீடியோவையும் அப்படியே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அப்லோடு செய்துவிட்டது. இதற்கு தான் ரோகித் சர்மா தன்னுடைய அதிருப்தியை இப்போது தெரிவித்திருக்கிறார். இப்படி ஒரு ஒளிபரப்பு நிறுவனம் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த அதிருப்தி ஐபிஎல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.