ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் மனுவை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை கைது செய்தது. அதையடுத்து அவர் முதல்வர் பொறுப்பை ஜாமீன் செய்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நாளை (புதன்கிழமை) தினத்துக்கு ஒத்திவைத்துள்ளனர் நீதிபதிகள்.

அண்மையில் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைக்கு ஆளான டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் வகையில் இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். அதை மேற்கோள்காட்டி ஹேமந்த் சோரன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதில் அமலாக்கத் துறையின் வாதத்தை பெற வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அந்த வகையில் கேஜ்ரிவால் வழக்கில் இருந்து ஹேமந்த் சோரன் வழக்கு முற்றிலும் மாறானது எனவும். ஹேமந்த் சோரன் விசாரணையின் போதே சாட்சிகளை கலைக்க முயன்றார் எனவும் அமலாக்கத் துறை கடந்த திங்கள்கிழமை (மே 21) தெரிவித்தது. மேலும், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஹேமந்த் சோரன் சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகியுள்ளார்.

இதற்கு முன்பு தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு தொடர்ந்திருந்தார். பல மாதங்கள் கிடப்பில் இருந்த அந்த வழக்கை மே 3-ம் தேதி தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தச் சூழலில்தான் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.