47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை; தகிக்கும் டெல்லி – 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று (மே.20) 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமான வெப்பநிலை பதிவாக அறியப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை வீசும் என்று எச்சரித்துள்ளது.

மே 23 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஒரு சில பகுதிகளிலும் குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளிலும் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் மாநிலங்களில் மழை வாய்ப்பு: வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தென் மாநிலங்களான கேரளா, தமிழகத்தில் மழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக கேரள அரசு நேற்று அனைத்து மாவட்டங்களில் அவசர கால மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியது. நிலச்சரிவு, தொற்று நோய்கள் ஏற்படலாம் எனக் கருத்தில் கொண்டு இதனை அரசு தெரிவித்தது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (மே.21) கனமழை முதல் மிககனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

16 மாவட்டங்களில் இன்று கனமழை: முன்னதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மதுரை, கோவை, டெல்டா உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்திருந்தது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவடகிழக்கு திசையில் நகர்ந்து,மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 24-ம் தேதி வாக்கில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, தமிழக, கர்நாடக கடலோரம், லட்சத்தீவு – மாலத்தீவு, மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை அதிகபட்சம் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு கேரள கடலோரம், தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சம் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது,

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.