“விஜய் சேதுபதி திரையில் பார்ப்பதைவிடவும் நேரில் சிறந்த மனிதராக இருக்கிறார்" – ராம் கோபால் வர்மா

கதாநாயகனாக, வில்லனாக பல்வேறு பரிமாணங்களில் நடித்து கோலிவுட்டில் வலம் வந்த விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தியிலும் தனது நடிப்பால கவனம் ஈர்த்து தொடர்ச்சியாகப் பல படங்களில் பிஸியாகியிருக்கிறார்.

குறிப்பாக, சமீபத்தில் பாலிவுட்டில் அவர் நடித்த ‘ஃபார்ஸி’, ‘மேரி கிறிஸ்துமஸ்’, படங்கள் விஜய்சேதுபதிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

நடிகர் சூர்யாவுடன் ராம் கோபால் வர்மா

இந்நிலையில் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து வித்தியாசமான படங்களை இயக்கிய, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா, திடீரென நடிகர் விஜய் சேதுபதியை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறார். 

விஜய் சேதுபதியை சந்தித்துப் பேசியது குறித்து நெகிழ்ச்சியாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள ராம் கோபால் வர்மா, “விஜய் சேதுபதியை பல முறை திரையில் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போதுதான் அவரை நேரில் பார்த்து அவருடன் பேசினேன். திரையில் பார்த்ததைவிடவும் நேரில் அவர் இன்னும் சிறந்த மனிதராக இருக்கிறார்” என்று நெகிழ்ந்துள்ளார்.

இருவரின் இந்தச் சந்திப்பு அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையா? ராம் கோபால் வர்மா, விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணப் போகிறாரா என்ற கேள்விகள் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகிறது. ராம் கோபால் வர்மாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.