பூத்வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம்

புதுடெல்லி: பூத்வாரியாக முகவர்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய சட்டவிதிகளின் படி கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஏடிஆர், காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் 2 அமைப்புகளும் புதிதாக ஒரு மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில், வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்த்து, 48 மணி நேரத்துக்குள் இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்ப தாவது:

தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படி 17சி படிவம், கட்சிகளின் முகவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதன்படி, பூத்வாரியாக அந்தந்த கட்சிகளின் முகவர்களுக்கு 17சி படிவத்தின் நகல் வழங்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகு, பாதுகாப்பு அறையில் (ஸ்டிராங் ரூம்) அசல் படிவங்கள் பத்திரமாக வைக்கப்படுகின்றன. 17சி படிவ விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய சட்டவிதிகளின் படி கட்டாயம் இல்லை.

தவிர, வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17சி படிவத்தை வெளியிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும். அதாவது, முதல்கட்டமாக வெளியிடப்படும் வாக்குப்பதிவு விவரங்களும், 2-ம் கட்டமாக தபால் வாக்குகளுடன் சேர்த்து வெளியிடப்படும் வாக்குப்பதிவு விவரங்களும் வேறுபடும். இந்த சூழலில், 17சி படிவத்தை பொதுவில் வெளியிட்டால் மக்களிடம் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்.

பிரச்சினைகள் உருவாகும்: மேலும், சமூகவிரோத சிந்தனை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவார்கள். போலி பிரதிகளை உருவாக்கி பிரச் சினையை உருவாக்குவார்கள்.

தேர்தலின்போது குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத் தில் வெற்றி – தோல்வி நிர்ணயிக்கப்படுவது இயல்பானது. அதற்காக 17சி படிவத்தை வெளியிட்டால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.