சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கு குரல்கொடுத்துவரும் தலித் அல்லாத நபர்களுக்கு கடந்த 2007, 2008 முதல் ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கிவருகிறது. அம்பேத்கர் சுடர், மார்க்ஸ் மாமணி (2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது), பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு (திருவள்ளுவர்) ஆகிய பெயர்களில் விசிக விருதுகள் வழங்கிவருகிறது.
அதன்படி, இந்தாண்டுக்கான விருதுகளை யாருக்கு அளிக்கப்படுகிறது என்ற பட்டியலை விசிக வெளியிட்டது. அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் (அம்பேத்கர் சுடர்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் (மார்க்ஸ் மாமணி), வழக்கறிஞர் அருள்மொழி (பெரியார் ஒளி), எஸ்றா சற்குணம் (காமராசர் கதிர்), பேராசிரியர் ராஜ்கௌவுதமன் (அயோத்திதாசர் ஆதவன்), முனைவர் எஸ்.எஸ்.சிக்கந்தர் (காயிதேமில்லத் பிறை), சுப்பராயலு (செம்மொழி ஞாயிறு) ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அதோடு, விருது வழங்கும் நிகழ்ச்சி மே 25-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை விசிக விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில், கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், விருது பெறுபவர்கள் மற்றும் விசிக நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் ஒளி விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிகழ்வில் பா.ஜ.க மற்றும் மோடி குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார் பிரகாஷ் ராஜ்.
ஜெய் பீம் என்ற முழக்கத்துடன் பேச ஆரம்பித்த அவர், “திருமாவளவனை போல் எனக்கு கொள்கை போராட்டத்தில் நீண்ட அனுபவம் இல்லை. இருந்தாலும் தொடர்நது பேசுகிறேன்.
நான் ஒரு கலைஞன்தான். ஆனால் என்னுடைய திறமையால் மட்டும் நான் கலைஞன் ஆகவில்லை. என்னைவிட திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். இன்னைக்கு ஒரு மேடையில் நான் நிற்க காரணம் என்னுடைய திறமை மட்டும் அல்ல, அது மக்களின் அன்புதான். மேடை ஏற்றிய மக்களுக்கு ஒரு பிரச்னை இருக்கும் போது, ஒரு கலைஞன் கோழை ஆகிவிட்டால் இந்த சமுதாயம் கோழை ஆகிவிடும்.
ஆகையால்தான் மன்னர் (மோடி) குறித்து பேசி வருகிறேன். இனி அவரை மன்னர் என சொல்ல முடியாது. அவர்தான் இப்போது தெய்வத்தின் குழந்தை ஆகிவிட்டாரே. இனி அவரை மனுஷனா நீ என திட்ட முடியாது. இனி தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கௌரி லங்கேஷின் தந்தை லங்கேஷ் தான் எனது ஆசான். அவர் சொன்னார், ‘எதிர்க்கட்சி மக்களின் நண்பனாக இருக்க வேண்டும்’ என்று. அப்படித்தான் செயல்படுகிறேன். ஜூன் 4 ம் தேதி பிறகு எனக்கு வேலை இருக்குமா என தெரியவில்லை. சிறுபான்மையினரை பாதுகாப்பது தான் பெரும்பான்மையினரின் கடமை. அம்பேத்கர் சட்டத்தை எழுதாமல் இருந்து இருந்தால் இந்த நாடு எப்படி இருந்திருக்கும் என யோசித்தால் பயமாக இருக்கிறது. ” என்றார்
மோடி குறித்து தொடர்நது பேசிய அவர், “பாசிசத்தின் சர்வாதிகாரி அவர். அவர் ஒரு புஷ்ப விமானத்தில் வருவார். மக்கள் வேலிக்கு வெளியே நிற்கிறார்கள். நின்று தான் பூ போடுகிறார்கள். அவருக்கு என்றைக்கு புரியும் நம்ம பசி. மக்களுடைய மனம் தெரியாதவர் மக்கள் வியர்வை தொடாதவர், தெய்வ மகன் இல்ல. டெஸ்டியூப் பேபி” என கடுமையாக பேசினார். .
விழாவில் தொடர்ந்து பேசிய திருமாவளவன், “சனாதன பயங்கரவாதிகளால் பிரகாஷ் ராஜுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் உண்டு. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சொல்வேன். சனாதன பயங்கரவாதிகள் எதுவும் செய்வார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88