இரவு உணவு தராததால் ஆத்திரம்: தாயை அடித்துக் கொன்ற கொடூர மகன்

ரத்லம்,

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரவு உணவு தராததால் 30 வயது நபர் ஒருவர் தனது தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்லம் மாவட்டத்தில் உள்ள சரவன் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

சரவன் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலியா பீல், இவரது மனைவி ஜீவாபாய் (65 வயது). இவர்களுக்கு ஆஷாராம் (30 வயது) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு உணவு தொடர்பாக ஆஷாராமுக்கும் அவரது தாய் ஜீவாபாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மாலியா பீல் தலையிட்டு ஆஷாராமை கண்டிக்கவே அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவில் தந்தை தூங்கிய பிறகு வீடு திரும்பிய ஆஷாராம், கட்டை மற்றும் செங்கற்களால் தனது தாய் ஜீவாபாயை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். இதையடுத்து வீட்டின் முற்றத்தில் உள்ள வேப்பமரத்தில் அவரது உடலை தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல் மாற்ற முயற்சித்துள்ளார்.

இது தொடர்பாக மாலியா பீல் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜீவாபாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆஷாராமை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.