சமாளிக்க தயாராக இருங்கள்.. இஸ்ரேலுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா பகிரங்க எச்சரிக்கை

ஹமாஸ்- இஸ்ரேல் போர் 8-வது மாதமாக நீடிக்கும் நிலையில், லெபனானைச் சேர்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்ப்பு மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லா, தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, “எங்கள் தரப்பில் இருந்து உங்களுக்கு (இஸ்ரேல்) ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. சமாளிக்க தயாராக இருங்கள்” என எச்சரித்தார்.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருந்தபோதிலும் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நஸ்ரல்லா பட்டியலிட்டார். பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்திருப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு என்று அவர் கூறினார்.

ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் சர்வதேச தீர்மானங்களை இஸ்ரேல் மதிக்கவில்லை என்றும், ரபா மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதாகவும் நஸ்ரல்லா குற்றம் சாட்டினார்.

ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா, பாலஸ்தீனிய பிரச்சினை மற்றும் காசா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போரிடுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.