“இமாச்சலில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயன்றார் மோடி” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை பண பலத்தை பயன்படுத்தி கவிழ்க்க பிரதமர் நரேந்திர மோடி முழு முயற்சி எடுத்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசம், காங்ரா மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “மோடி இமாச்சல் மாநிலத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பண பலத்தை பயன்படுத்தி கவிழ்க்க முழு முயற்சிகளை மேற்கொண்டார். அப்படிப்பட்ட தலைவர் வேண்டுமா?

கடந்த சில ஆண்டுகளில் பாஜக ரூ.60,000 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. மோடி தொடங்கி பாஜக தலைவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள், பண பலத்தைப் பயன்படுத்துகிறார்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள் மற்றும் கடவுளின் பெயரால் மக்களை தவறாக வழிநடத்தி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுகிறார்கள்.

எனது இதயம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. இது ஓர் அழகான மாநிலம். கலாச்சாரத்துக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற மாநிலம் இது. இமாச்சலப் பிரதேசத்திடமிருந்து நாடு கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.