காசா சிறுவர் நிதியத்துடன் கைகோர்த்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவிப்பு

மே 31 வரை பங்களிப்பு வழங்க கால அவகாசம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இன்றுவரை 127 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

காஸாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களின் அவலநிலை, குறிப்பாக தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இன்மை காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட மனிதாபிமான உதவி வழங்குவதற்காக நிதியமொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய காஸாவிலுள்ள சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிதியமொன்றை ஆரம்பிப்பதற்காக ,கடந்த இப்தார் கொண்டாட்டத்திற்காக ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றினால் ஒதுக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபா நிதி முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவனத்தின் (UNRWA)ஊடாக 04-01-2024 ஆம் திகதி பாலஸ்தீன அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடைக்கு மேலதிகமாக, காசா சிறுவர் நிதியத்திற்கு பங்களிக்குமாறு வர்த்தக நிறுவனங்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுடன் இலங்கையின் நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் என்பன கைகோர்த்தன.

இதன்படி, காஸா பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகும் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அந்த நிதி எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகவர் அமைப்பிடம் வழங்கப்பட உள்ளது.

மேலும், பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மே 31ஆம் திகதி வரை இதற்காக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டு, மேற்கண்ட தொகையுடன், அதுவரை பெறப்பட்ட முழு நன்கொடைகளும் துரிதமாக ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் முகவர் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.