2024 ஐ.பி.எல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே – 3 தமிழக வீரர்களுக்கு இடம்

மும்பை,

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி கடந்த 26ம் தேதி நிறைவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொல்கத்தா அணிக்கு இது 3வது ஐ.பி.எல் கோப்பை ஆகும்.

இந்த தொடரில் அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பி விராட் கோலிக்கும், அதிக விக்கெட் எடுத்தவருக்கான ஊதா தொப்பி ஹர்ஷல் படேலுக்கும் வழங்கப்பட்டது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததை அடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் உள்ளிட்ட பலரும் 2024 ஐ.பி.எல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே 2024 ஐ.பி.எல் தொடரின் தன்னுடைய சிறந்த அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணியில் தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, நடராஜன் ஆகிய 3 தமிழக வீரர்களுக்கு அவர் இடம் அளித்துள்ளார்.

இந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹர்ஷா போக்லே தேர்வு செய்த அணி விவரம்;

விராட் கோலி, சுனில் நரேன், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக், ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, டிரெண்ட் பவுல்ட், நடராஜன்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.