புனே சொகுசு கார் விபத்து; சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்: மருத்துவமனை கடைநிலை ஊழியர் கைது

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இளம் ஐ.டி. ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சிறுவனை கைது செய்த போலீஸார் அவரை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் சிறுவ னுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது சர்ச்சையானதை தொடர்ந்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அச்சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து சிறுவனுக்கு கார் வழங்கிய அவரது தந்தையும் கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார். சிறுவனுக்கு மது வழங்கியதாக மதுபானக் கூட உரிமையாளர் மற்றும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்

மேலும் இந்த வழக்கில் சிறுவ னுக்கு பதிலாக குடும்ப டிரைவரை சிக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சிறுவனின் தாத் தாவை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து சிறுவன் மது அருந்தியதை உறுதி செய்ய, அவரது ரத்த மாதிரியை சசூன் அரசு மருத்துவமனையில் போலீஸார் கொடுத்திருந்தனர். ஆனால் சிறுவன் மது அருந்தவில்லை என அறிக்கை வந்ததால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இதில் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றியதாக சசூன் அரசு மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் அஜய் தவாரே, முதன்மை மருத்துவ அதிகாரி ஹரி ஹல்னார் ஆகிய இரு மருத்துவர்களை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விபத்தின்போது சிறுவன் மது அருந்தியிருந்ததை மறைப்பதற்காக வேறு ஒருவரின் ரத்த மாதிரியை இவர்கள் மாற்றியதாக போலீஸார் தெரிவித் தனர். போலீஸார் நேற்று முன் தினம் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்தை கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்த இரு மருத்துவர்களுக்காக ரூ.3 லட்சம்லஞ்சம் வாங்கியதாக மருத்துவமனையின் கடைநிலை ஊழியர் ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.