டெல்லி – அமெரிக்கா ஏர் இந்தியா விமானம் 24 மணி தாமதம்: பயணிகள் அவதி என புகார்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு வியாழக்கிழமை அன்று செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சுமார் 24 மணி நேரம் தாமதமானதாக பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டனர்.

ஏசி இல்லாத சூழல், தரையில் காக்க வைக்கப்பட்ட நிலை, மயங்கிய நிலையில் பயணிகள் என அந்த பதிவுகளில் விமான நிறுவனத்தின் மீது பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த மோசமான அனுபவத்தையும் பகரிந்துள்ளனர். அந்த விமானம் ஆபரேஷனல் சிக்கல் காரணமாக தாமதமானதாக தகவல்.

“தனியார்மயமாக்கலின் தோல்வி என்றால் அது ஏர் இந்தியா கதை தான். ‘ஏஐ 183’ விமானம் 8 மணி நேரம் தாமதமாகி உள்ளது. ஏசி இயங்காத விமானத்துக்குள் பயணிகள் அமர வைக்கப்பட்டனர். சிலர் மயங்கிய நிலையில் அனைவரும் தரையிறக்கப்பட்டோம். இது மனிதாபிமானமற்றது” என பத்திரிகையாளர் ஸ்வேதா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த ஏர் இந்தியா நிர்வாகம், “இதற்கு நாங்கள் வருந்துகிறோம். பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க எங்கள் குழுவிடம் தெரிவித்துள்ளோம்” என கூறியது.

இதே போல பல்வேறு பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் விமானம் தாமதமானது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தனர். அண்மையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் கூட்டாக விடுப்பு எடுத்த காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகள் தங்குவதற்கான வசதி ஏர் இந்தியா தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.