பீகாரில் அதிகரிக்கும் வெப்பம்; தேர்தல் பணியாளர்கள் உட்பட 14 பேர் பலி

பீகார்,

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் உச்சமடைந்து வருகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வெப்ப அலை வீசி வருகிறது. டெல்லி உள்பட பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 தேர்தல் பணியாளர்கள் உட்பட 14 பேர் வெப்பத் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வெப்பம் காரணமாக அனைத்து பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் வருகிற 8-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.