பிரதமர் பதவியில் இருந்து மோடி ராஜினாமா: 3-வது முறையாக ஜூன் 8-ல் பதவியேற்பு

புதுடெல்லி: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக வரும் சனிக்கிழமை (ஜூன் 8) பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. அதேநேரம் இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றது.

இந்நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. இதற்காக இன்று கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது அக்கட்சி.

இதன் அடுத்தகட்டமாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி. மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார். டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நடந்தது.

17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

சனிக்கிழமை பதவியேற்பு: இதற்கிடையே, மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், சனிக்கிழமை (ஜூன் 8) மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.