ஜூன் 18-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்வதாக தகவல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 18 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரணாசி தான் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி தொகுதி. அங்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் மோடி வாரணாசி செல்வது இது முதல் முறையாகும். பிரதமர் வருகையை ஒட்டி பிரம்மாண்ட ஏற்பாடுகளை உள்ளூர் பாஜக தலைவர்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. மேலும், பிரதமரின் வருகையை முன்னிட்டு மாவட்ட அதிகாரிகள் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

விவசாயிகளுக்காக முதல் கையெழுத்து: முன்னதாக நேற்று (ஜூன் 10) பிரதமராக 3-வது முறை பதவியேற்ற மோடி, தனது அலுவலகத்துக்கு வந்தார். விவசாயிகளுக்கு ‘பிஎம் கிசான் சம்மான்’ நிதி திட்டத்தின் 17-வது தவணையை விடுவிப்பதற்கான கோப்பில் அவர் முதல் கையெழுத்திட்டார். இதன்படி, நாடு முழுவதும் 9.30 கோடி குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6,000 நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முதல் கையெழுத்தை விவசாயிகள் நலன் சார்ந்து இட்ட பிரதமர் தொகுதிக்கு மேற்கொள்ளும் முதல் பயணத்திலும் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பது கவனம் பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.