NEET: `நாட்டின் எதிர்காலத்துடன் காங்கிரஸ் விளையாடுகிறது!' – மத்திய கல்வியமைச்சர் தாக்கு

தேசிய தேர்வு முகவாண்மையால் (NTA) மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வான நீட் (NEET) தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதில், எப்போதும் இல்லாத அளவுக்கு முதல்முறையாக 67 மாணவர்கள் முதலிடம் பிடித்ததும், பல மாணவர்களுக்கு 720-க்கு 719, 718 மதிப்பெண்கள் அழைக்கப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கிளப்பியது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. நீட் தேர்வு வேண்டாம் என தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டுடன் தற்போது மகாராஷ்டிரா மாநிலங்களும் நீட் வேண்டாம் என்ற குரல்கொடுத்திருக்கிறது.

Neet Exam

இதற்கிடையில் NTA, நீட் தேர்வு நடத்தியதில், முடிவுகள் வெளியிட்டதிலும் எந்த மோசடியும் நடைபெறவில்லையென்றும், தேர்வு மையத்தால் நேரம் தவறியமைக்காக 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை என்றும் விளக்கமளித்தது. இருப்பினும், இதுதொடர்பான மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்துமாறு உத்தரவிட, NTA ஜூன் 23-ம் தேதி மறுதேர்வு நடத்துவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த நிலையில், நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளைப் பொய்களைப் பரப்புவதாகவும், நாட்டின் எதிர்காலத்தோடு காங்கிரஸ் விளையாடுவதாகவும் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சித்திருக்கிறார்.

முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நீட் தேர்வில் முடிவுகளில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மட்டும் பிரச்னை இல்லை. வினாத்தாள் கசிவு போன்ற மோசடி நடந்திருக்கிறது. மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வில் பங்கேற்கும் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே

தேர்வு மையம் மற்றும் பயிற்சி மையம் என்ற இணைப்பை உருவாகி, ‘பணம் செலுத்துங்கள், வினாத்தாள் பெறுங்கள்’ என்ற விளையாட்டு விளையாடப்படுகிறது. மோடி அரசு தனது பொறுப்பை NTA மீது இறக்கிவைத்துவிட்டு தனது பொறுப்பிலிருந்து தப்ப முடியாது. இதில், உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களின் ஆண்டு வீணாகாமல் இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு, மோசடி மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு சீரழித்துள்ளது” என்று இன்று மாலை ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திரா பிரதான், “உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். நீட் தேர்வில் இதுவரை எந்தவிதமான முறைகேடு, ஊழல், வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. இது தொடர்பான அனைத்து உண்மைகளும் உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. வினாத்தாள் கசிவைத் தடுக்கவும், முறைகேடு இல்லாத தேர்வை நடத்தவும், மத்திய அரசு இந்த ஆண்டு பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

அதில், பல கடுமையான விதிகள் உள்ளன. அப்படி ஏதாவது முறைகேடுகள் தொடர்பிருந்தால், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தவறான எண்ணத்தில் காங்கிரஸ் இருக்கக் கூடாது. இந்த சட்டத்தின் விதிகள் மிகவும் கவனமாகச் செயல்படுத்தப்படும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளதுடன், மாணவர்களின் மன அமைதியையும் பாதிக்கிறது. இதுபோன்ற பிரச்னையில் எதிர்க்கட்சிகள் உண்மைகளை அறியாமல் பொய்களைப் பரப்புகின்றன. காங்கிரஸ் தனது அற்ப அரசியலுக்காக நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.