சாகித்ய அகாடமி விருது: யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சாகித்ய அகாடமியின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் யூமா வாசுகிக்கும், ‘யுவ புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கெனவே சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக பாலசாகித்ய புரஸ்கார்க்கும் (BalSahityaPuraskar) தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது, வாழ்த்துகள்.

காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார்க்குத் (YuvaPuraskar) தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் எனது பாராட்டுகள்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.