ஒடிசாவில் இரு சமூகத்தினர் இடையே மோதல்: பாலசோர் பகுதியில் 144 தடை உத்தரவு

புவனேஸ்வர்,

ஒடிசாவில் பாலசோர் நகரிலுள்ள புஜாக்கியா பிர் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்டதொரு சமூகத்தினர், அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் இரத்தத்தை சாலையில் வழிந்தோடவிட்டதாக குற்றம் சாட்டி நேற்று அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்கள் மீது எதிர்தரப்பிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இருதரப்புக்குமிடையே சண்டை மூண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்த கலவரத்தில் போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை (ஊரடங்கு) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒடிசாவின் புதிய முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, பாலசோர் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு, அங்குள்ள கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். இந்த கலவரத்தால் பாலசோர் பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இன்று (ஜூன் 18) நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பாலசோர் முழுவதும் கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலசோர் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.