அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள் 5,842 பேருக்கு மாற்றுப் பணி

சென்னை: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 5,842 உபரி ஆசிரியர்களை மாற்றுப் பணி அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணியமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: “தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5,545 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 299 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் (மொத்தம் 5,842) உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரசு மானியம் விரயமாவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இதைத் தொடர்ந்து, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் மாணவர்கள் நலன் கருதியும், உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி இழப்பை தவிர்த்திடும் பொருட்டும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்யவும், மாற்றுப்பணி வழங்கவும் உரிய ஆணை வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டார்.

அவரின் கருத்துருவை கவனமாக அரசு பரிசீலித்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024-ம் ஆண்டுக்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாக பணிபுரிந்து வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல், மாற்றுப்பணி வழங்க அனுமதித்து ஆணையிடுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்: பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி ஆசிரியர்களை முதலில் வட்டாரத்துக்குள்ளும், அங்கு காலியிடம் இல்லை என்றால், மாவட்டத்துக்குள்ளும் பணி நிரவல் செய்ய வேண்டும். ஆசிரியர் விருப்பப்பட்டால் மாவட்டத்துக்கு வெளியே பணிநிரவல் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை அதிகம் உள்ள அரசு, ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் செல்ல அனுமதிக்க வேண்டும்,” என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.