அலைக்கற்றை ஏலம் வழியே அரசுக்கு ரூ.11,340 கோடி வருவாய்

புதுடெல்லி,

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குநர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொலைதொடர்பு துறையானது, 2023-24-ம் ஆண்டிற்கான அலைக்கற்றை ஏலத்தினை நடத்தி முடித்துள்ளது.

இதுபற்றி தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஜூன் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களாக நடந்த ஏலத்தின் முடிவில், பல்வேறு அதிர்வெண் கொண்ட அலைவரிசைகளுக்கு 141.4 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை விற்ற வகையில், மொத்தம் ரூ.11,340 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன், 2022-ம் ஆண்டில் நடந்த ஏலத்தில் விற்கப்படாத அலைக்கற்றைகள் மற்றும் 2024-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய அலைக்கற்றை உரிமங்கள் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் நோக்குடன் இந்த ஏலம் நடத்தப்பட்டு உள்ளது.

இவற்றில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.6,856.76 கோடிக்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.973.62 கோடிக்கும், வோடோபோன் ஐடியா நிறுவனம் ரூ.3,510.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.