டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கைகளை அமல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி பி ஐ விசாரணைக்கு அந்த மாநில கவர்னர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக எழுந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை செய்தது. டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ்சிசோடியா மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தது.

இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த சி பி ஐ அதிகாரிகள், நேற்று முன்தினம் டெல்லி திகார் சிறைக்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு திகார் சிறைக்கு சென்ற சி பி ஐ அதிகாரிகள், அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிறிதுநேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவரை கைது செய்வதாக கூறினர். இது தொடர்பான ஆவணத்தை அவருக்கும், சிறைத்துறைக்கும் அதிகாரிகள் வழங்கினர்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்த வழக்கில் கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமீனை, டெல்லி ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் ெகஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.

அந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவரை சி பி ஐ கைது செய்து இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.