சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்: மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்புடன் உடனே சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்மொழிந்த அரசினர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று இதுதொடர்பான அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புள்ளிவிவர சட்டத்தின்படி, மாநில அரசுகள் சமூக பொருளாதார புள்ளிவிவரங்களை சேகரிக்கலாமே தவிர, அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட இனங்கள் தொடர்பாக புள்ளிவிவரம் சேகரிக்க இயலாது.உச்ச நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கும் நிலுவையில் உள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கு கடந்த 2023 அக்டோபர் 22-ம் தேதி கடிதம் எழுதியுள்ளேன்.

மத்திய அரசு களப்பணியை மேற்கொள்ளும்போது கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மாநில அரசு எடுக்கும் முடிவுகள், இயற்றும் சட்டங்களுக்குதான் எப்போதும் சட்டரீதியான பாதுகாப்பு இருக்கும்.

எனவே, இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களை தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.

எனவே, 2021-ம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும். அத்துடன், இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து, இந்த தீர்மானத்தை செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக), சின்னப்பா (மதிமுக),ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகைமாலி (மார்க்சிஸ்ட்), சிந்தனைச்செல்வன் (விசிக) ஆகியோர் வரவேற்றனர். நயினார் நாகேந்திரன் (பாஜக), அருள் (பாமக) ஆகியோர் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வழி உள்ளதாக கூறினர்.

நிறைவாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘அனைத்து மக்களுக்கும் சமஉரிமை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

தொடர்ந்து, அவர் கொண்டுவந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.