`ஆளுநரா… சபாநாயகரா… பதவி பிரமாணம் செய்துவைப்பது யார்?’ – போராடும் 2 MLA-க்கள் | பின்னணி என்ன?!

மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் காலியாக இருந்த இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராயத் உசேன், சயாந்திகா பந்தோபாதியா ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் இருவரும் இன்னும் எம்.எல்.ஏவாக பதவியேற்கவில்லை. இவ்விவகாரத்தில் ஆளுநர் ஆனந்தாபோஸ் மற்றும் மாநில சபாநாயகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க எனக்குத்தான் அதிகாரம் இருப்பதாக ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்ட இருவரும் ராஜ்பவனுக்கு வந்து பதவியேற்றுக்கொள்ளும்படி நேற்று முன் தினம் ஆளுநர் இருவருக்கும் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் ராஜ்பவன் செல்ல விருப்பமில்லை என்று கூறி இருவரும் ராஜ்பவன் சென்று பதவியேற்றுக்கொள்ளவில்லை. ஆளுநர் இருவருக்காகவும் காத்திருந்துவிட்டு டெல்லிக்கு சென்றுவிட்டார். முன்னதாக ராஜ்பவன் பெண் ஊழியர் ஒருவர் ஆளுநருக்கு எதிராக பாலியல் தொல்லை புகார் கொடுத்து இருந்தார்.

அச்சம்பவத்தை சுட்டிக்காட்டி இருவரும் ராஜ்பவன் செல்ல மறுத்துவிட்டனர் என்கிறார்கள். இந்த நிலையில் ஆளுநர் சட்டமன்றத்திற்கு வந்து பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று இரு எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்தில் காத்திருந்தனர். ஆனால் ஆளுநர் வராததால் சட்டமன்றத்திற்கு வெளியில் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சயாந்திகா இது குறித்து கூறுகையில், “ஆளுநருக்கு எதிராக ராஜ்பவன் பெண் ஊழியர் மானபங்க புகார் கொடுத்து இருக்கிறார். எனவே ராஜ்பவன் செல்ல பயமாக இருக்கிறது. இதனால் ஆளுநர் சட்டமன்றத்திற்கு வந்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கவேண்டும். அல்லது சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க அனுமதிக்கவேண்டும். ஆளுநர் பதவி மீது நாங்கள் மதிப்பு வைத்திருக்கிறோம். ராஜ் பவனில் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் என்ற அச்சத்தில் நாங்கள் ராஜ்பவன் செல்ல பயப்படுகிதோம்” என்றார்.

முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆளுநரை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.பதவி ஏற்கவிடாமல் தடுக்க ஆளுநருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரிடம் சொல்லி பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கலாம். அல்லது சட்டமன்றத்திற்கு வந்து ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கலாம்” என்றார்.

ஆனால் ஆளுநர் தரப்பில், `எம்.எல்.ஏ.க்களுக்கு யார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாம் என்பது குறித்து உச்ச் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஒரு உத்தரவை மேற்கோள் காட்டியும், அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிக்காட்டியும் தனக்குத்தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும், அல்லது தான் சொல்லும் நபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் மூத்த பட்டியலின அல்லது பழங்குடியின எம்.எல்.ஏ.வை கொண்டு பதவிப்பிரமாணம் செய்து வைக்க அனுமதிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள்

ஆனால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை. சட்டமன்றத்திற்கு சென்று பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநருக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சபாநாயகர் ஆளுநரின் மாண்மை குறைக்கும் வகையில் கடிதம் எழுதியதை ஏற்க முடியவில்லை. சபாநாயகர், `தான் தான் பதவிப்பிரமாணம் செய்து வைப்பேன்’ என்று கூறுகிறார்’ என்று ஆளுநர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் தங்களுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து சட்டவல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்துக்கொண்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.