கர்நாடகா | சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரியில் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

பலியானவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தாலுகாவில் உள்ள எம்மேஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆதர்ஷ் (23) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெம்போ டிராவலர் ஒன்றை வாங்கியுள்ளார். இதனையடுத்து கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சவதாட்டி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சோடே லட்சுமி ஆகிய கோவிலுக்கு தனது வாகனத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்துக்காக தனது பெற்றோர்கள் உடன் பாட்டி, மாமா என உறவினர்களையும் அழைத்துச் சென்றுள்ளார்.

ஜூன் 24ம் தேதி எம்மேஹட்டியில் இருந்து மொத்தம் 17 பேர் கிளம்பியுள்ளனர். இன்று காலை இவர்கள் மீண்டும் ஊர் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​ஹாவேரி மாவட்டம் குடேனஹள்ளி கிராஸில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியது. நள்ளிரவு சமயத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்ததால் எம்மேஹட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.