டி20 உலகக்கோப்பை : ரோகித், விராட் கோலி சகாப்தம் நாளையோடு முடிவுக்கு வருகிறது..! கடைசி இறுதிப் போட்டி

நாளை நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் சாம்பியன் பட்டத்துக்கு மோத இருகின்றன. இப்போட்டி இந்திய அணிக்கு மட்டும் இறுதிப்போட்டி அல்ல, ரோகித் சர்மா, விராட் கோலிக்கும் தான். இருவரும் இந்திய அணிக்காக 20 ஓவர் பார்மேட்டில் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடப்போகும் ஒரு போட்டியாக இருக்க இப்போட்டி இருக்கும். இதன்பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை 20 ஓவர் பார்மேட்டில் இந்திய அணிக்காக பார்க்க முடியாது. இருவரின் சகாப்தமும் நாளையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இப்போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா அணி என்று இனி சொல்ல முடியாமல் போகலாம். 

டி20யில் ரோஹித்-கோலி சகாப்தம் முடியலாம்

ஆஸ்திரேலியாவில் கடந்த முறை 20 ஓவர் உலகக்கோப்பை நடைபெற்றபோது இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்து, வெறும் கையுடன் இந்தியா திரும்பியது. அந்த போட்டிக்குப் பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு இந்திய 20 ஓவர் அணியில் கிட்டதட்ட ஒருவருடம் விளையாடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்களை பிசிசிஐ இந்த பார்மேட்டில் சேர்க்கவே இல்லை. டி20 உலக கோப்பை நெருங்கியபோதுதான் டி20 அணிக்குள் வந்தார்கள். அவர்கள் நாளை நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றியுடன் இந்திய அணிக்கு விடைகொடுக்க திட்டமிட்டுள்ளார்கள். 

ரவீந்திர ஜடேஜா பெயரும் நீக்கம்

ஏனென்றால் ஏற்கனவே சில தோல்விகளை சந்தித்துவிட்டதால், இம்முறை தோல்வியோடு முடிக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் இருவரும். நிச்சயமாக விராட், ரோகித் ஆகியோருக்கு இந்த டி20 உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இடம் இருக்காது. அதற்கு முன்னோட்டமாக ஜிம்பாப்வே தொடரிலேயே அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இளம் வீரர் சுப்மன் கில் தலைமையிலான அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரவீந்திர ஜடேஜா பெயரும் நீக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை ஜடேஜாவுக்கும் இந்த டி20 உலக க்கோப்பை இறுதிப் போட்டி, இந்திய அணிக்காக 20 ஓவர் பார்மேட்டில் விளையாடப்போகும் கடைசி போட்டியாக கூட இருக்கலாம். 

இதுவரை ரோகித்- விராட் காம்போ

கோலி மற்றும் ரோஹித்தின் சகாப்தம் இதுவரை சிறப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஐசிசி கோப்பை கனவை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால், அது விராட் கோலிக்கு சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் விராட் 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார். அதேபோல், ரோஹித் சர்மாவின் கனவை நனவாக்குவது போல் இருக்கும். இதுவரை, இரு ஜாம்பவான்களும் 8334 டி20 சர்வதேச ரன்கள், 6 சதங்கள், 69 அரை சதங்கள் மற்றும் 119 கேட்சுகள் என்ற மகத்தான சாதனையை வைத்திருக்கின்றனர். இந்த கோப்பை என்பது அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு மணிமகுடமாக அமையும்.

இந்திய அணி வீரர்கள் ஆயத்தம்

அதனால், இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்களும் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு டி20 உலக கோப்பை என்ற சாம்பியன் பட்டத்துடன் பிரியா விடை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இருவரும் இந்த கோப்பையை ஏந்துவதற்கு தகுதியானவர்கள் என்பதால், எக்காரணத்தைக் கொண்டும்தவற விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். பார்படாஸில் நாளை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரை விராட், ரோகித் வெற்றியுடன் முடிப்பார்களா? என்பதை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.