Sardar 2: இரண்டு படங்கள் ரிலிஸுக்கு ரெடி, அடுத்த மாதம் முதல் `சர்தார் 2'; நாயகி இவர்தான்!

கார்த்தியின் கரியரில் எப்போதும் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் ரெடியாக இருந்ததில்லை. இப்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியானதில் சந்தோஷத்தில் இருக்கிறார். அதில் பிரேம்குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கார்த்தியின் ரசிகர்கள். நலன் குமாரசாமி இயக்கிய ‘வா வாத்தியார்’ ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டதால், மூன்றாவது படமாக ‘சர்தார் 2’ தொடங்குகிறது. கார்த்தியின் நெருங்கிய நண்பரான லக்‌ஷ்மண் குமார் முதல் பாகத்தைத் தயாரித்திருந்தார். இப்போது பார்ட் 2வையும் அவரே தயாரிக்கிறார்.

கார்த்தி

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன், கடந்த 2022ம் ஆண்டு இயக்கிய படம்தான் ‘சர்தார்’. இந்தப் படத்தில் இரண்டு கார்த்தி. அதில் ஒரு கார்த்தியின் பெயரே டைட்டிலாகும். ‘சர்தார்’ என ரகசியப் பெயர் கொண்டவராக போஸ் என்ற கதாபாத்திரத்திலும், காவல்துறை அதிகாரி விஜய் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்திலும் இரட்டை வேடத்தில் ஸ்கோர் செய்திருப்பார் கார்த்தி. தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை.

‘சர்தார்’

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பு மே மாதத்தில் நிறைவடையும் என்றும் ஜூன் இரண்டாம் வாரத்தில் ‘சர்தார்’ படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என்றும் திட்டமிட்டனர். ஆனால், நலனின் படம் இம்மாதம்தான் முடிவடைந்தது. ஆனாலும், ‘சர்தார் 2’க்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் இன்னொரு பக்கம் தீவிரமடைந்தன. காரணம், கடந்த பிப்ரவரி மாதமே சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ‘சர்தார் 2’க்கான பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது.

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக ‘சர்தார் 2’க்காக முறையான அறிவிப்பும், படப்பூஜைக்கான ஸ்டில்களும் வெளியாகின்றன. சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில்தான் நடைபெறவிருக்கிறது.

ஆஷிகா ரங்கநாத்

முதல் பாகத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடித்தது போல, இதிலும் பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார். கதாநாயகியாக ஆஷிகா ரங்கநாத் நடிப்பாரென தெரிகிறது. தமிழில் ‘பட்டத்து அரசன்’ என்ற படத்தில் நடித்திருக்கும் அவர், இப்போது சிரஞ்சிவியுடன் ‘விஸ்வம்பரா’வில் நடித்து வருகிறார். இதர நடிகர்களின் தேர்வும் நடந்து வருகிறது. மித்ரனின் நண்பரான ஜார்ஜ் வில்லியம்ஸே ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கும் இசையமைப்பாரென தெரிகிறது. ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.