சிபிஐ தொடர்ந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கடந்த 26ம் தேதி கைது செய்தது. அன்றைய தினமே அவர் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 3 நாள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

மூன்று நாள் காவல் நிறைவடைந்ததை அடுத்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கேஜ்ரிவால் மீண்டும் திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



இந்த வழக்கில் டெல்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர் கவிதா உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ நான்கு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. எனினும், இதுவரை எந்த குற்றப்பத்திரிகையிலும் கெஜ்ரிவாலின் பெயர் இல்லை.

மதுபான கொள்கை முறைகேடு காரணமாக ஆம் ஆத்மிக்கு கிடைத்த ரூ.100 கோடியில் ரூ. 44.45 கோடியை தேர்தல் பிரச்சார நோக்கங்களுக்காக ‘ஹவாலா சேனல்கள்’ மூலம் ஜூன் 2021 முதல் ஜனவரி 2022 வரை அக்கட்சி கோவாவுக்கு மாற்றியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதே வழக்கில், அமலாக்கத் துறை ஏற்கெனவே கேஜ்ரிவாலை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.