மெட்ரோ ரயில் பணிகள்: சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூலையில் அடையாறு சந்திப்பை அடையும் – தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பை நோக்கி சுரங்கப்பாதை பணி சீரான வேகத்தில் நடைபெறுகிறது.

இதனையடுத்து, முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’ வரும் ஜூலை மாத மத்தியில் அடையாறு சந்திப்பை அடையும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒன்று மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ) ஆகும். இந்த வழித்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் இருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கியது.



முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’, இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘அடையாறு’ ஆகிய இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்தடுத்து சுரங்கம் தோண்டும் பணிகளைத் தொடங்கின. இந்த இயந்திரங்கள் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றை அடுத்தடுத்து கடந்தன. குறிப்பாக, 2-வது இயந்திரமான ‘அடையாறு’, ஆற்றை இரண்டு வாரங்களுக்கு முன்பு கடந்தது. இந்த இயந்திரம் மூலமாக, சீரான வேகத்தில் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (காவிரி) வரும் ஜூலை மாத மத்தியில் அடையாறு சந்திப்பை அடைய உள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (காவிரி) மூலமாக மொத்தம் 1,228 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். தற்போது வரை தற்போது வரை 990 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் அடையாறு சந்திப்பை நோக்கி சீரான வேகத்தில் நகர்கிறது.

இப்பகுதியில் பூமிக்கடியில் நிறைய பாறைகள் இருப்பதால், சுரங்கப்பாதை பணி சீரான வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூலை மாத மத்தியில் அடையாறு சந்திப்பை அடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.