விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’.
இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். ரொமான்டிக் ஜானரில் இப்படம் உருவாகி இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர நயன்தாரா, அதர்வா, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/06/Screenshot 2024-06-29 101218.jpg)
இப்படத்தின் போஸ்ட்டரை நயன்தாரா, ஆர்யா, விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் வெளியிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விஷ்ணுவர்தன், “இந்த படம் ஒரு லவ் ஆக்ஷன் ட்ராமா. ஆகாஷ் முதல் படத்தில் நடிக்கிற மாதிரியே தெரில. திறமையான நடிகர். தனது நடிப்புத் திறனைச் சிறப்பாக மெருகேற்றி இருக்கிறார். காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்” என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அதிதி, “எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி. விஷ்ணு சார் கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். என் மேல் அவ்ளோ நம்பிக்கை வச்சிருக்காரு. என்னோட முதல் லவ் ஸ்டோரி திரைப்படம் இது. என்னோட நடிப்பு இந்த படத்தில் எல்லாருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/06/Screenshot 2024-06-29 101050.jpg)
ஆகாஷ் முரளியோட முதல் திரைப்படம் மாதிரியே இது தெரில. முதல் நாள் படப்பிடிப்பிற்கும் கடைசி நாள் படப்பிடிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் அவரிடம் பார்த்தேன். அவர் அப்பாவுக்குக் கொடுத்த ஆதரவு ஆகாஷ் முரளிக்கும் கொடுங்கள்” என்றார்.